Friday, May 11, 2012

தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..

தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..

Tuesday, December 13, 2011

தமிழ்ச்செல்வி...கள்


“வணக்கம் அண்ணா.. நான் தமிழ்ச்செல்வி பேசுகிறேன்..”

“வணக்கம்மா.. என்ன விஷயம்மா..?”

“ஒண்ணுமில்லைண்ணா...” அப்படின்னு எங்க உரையாடல் ஐந்து நிமிடம் தொடர்ந்து முடிந்ததும் மீண்டும் சிந்தனை.. என்ன இழவடா இது,  ஒரு எழவும் கிடைக்காது போல இருக்குது அப்படின்னு நினைத்தால்..

மீண்டும் தமிழ்ச்செல்வி என்ற பெயர் நினைவுக்கு வருகிறது. யார் இந்த தமிழ்ச்செல்வி? இந்த பொண்ணை நம்ம வாழ்க்கையிலே எப்ப முதன்முதலா சந்தித்தோம்? இது இருக்கட்டும், அப்பறம் பார்ப்போம். நமக்கு வயது அறுபதை நெருங்குது. இந்த அறுபது வயதில் நம்ம வாழ்க்கையில் எத்துனை தமிழ்ச்செல்வின்னு பெயர் உள்ள பெண்களை சந்தித்து இருக்கிறோம்? அப்படி போகுது சிந்தனை.

ஆகா பொழுது போகாமல் இருக்கும் நமக்கு.. பொழப்பு ஓட்ட ஒரு விசயம் கிடைத்து இருக்குது, அதை கெட்டியாக பிடித்து கொள்ள வேண்டும் அப்படிங்கிற நினைப்புடன் நினைவு ரயிலை இயக்கினால்.. அது முன்னோக்கில்ல செல்லுது. ஒரு சுண்டு சுண்டி பின்னோக்கி இழுத்தேன்,  போயே போயிட்டேன். ஆரம்ப பள்ளியில எங்க அய்யன் கொண்டு போய் சேர்த்திய நினைவு எல்லாம் வருகிறது. அப்படியே வந்தா அப்ப நம்மகூட படித்த தோழிகள் நினைவுக்கு வருகிறார்கள். கமலாத்தாள், வள்ளியம்மாள், நாச்ச்ம்மாள், கோவிந்தம்மாள், பாப்பம்மாள்.....  இந்த.... மாள்களுக்கு நடுவிலே ஒரு தமிழ்ச்செல்வியும் இருந்தது. நான் சொல்லுவது 1957 கால கட்டமுங்கோ.. அந்த காலத்திலேயே தமிழ் உணர்வில் பெயர் வைத்த பெரியவரை நினைத்துப் பார்த்தேன்...

அவரு பெயர் நாச்சிமுத்து...கொத்துக்கார அண்ணன் என எங்க ஊர் மக்கள் அவரை அடையாளம் காட்டுவார்கள்.. அவரை நினைவுக்கு கொண்டு வந்தா.. அந்த நினைவு வந்தே தீரும்.. அதை சொன்னாத்தான் தமிழ்ச்செல்விக்கும் பெருமை....

1957 லோ 58டோ நினைவுக்குவர மாட்டேங்குது. சீனா யுத்த காலம் அப்டின்னு நினைக்கிறேன். எங்க ஊருக்கு மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்கள் வந்தாரு. எங்க ஊரு பிரசிடெண்ட் அப்ப காங்கிரஸ் கட்சியில் இருந்தாரு.  அவரு அழைப்பை ஏற்று வருகை தந்திருக்காரு. எங்க ஊரு சாவடிக்கு முன்னால் கூட்ட மேடை. எங்க ஊரு சாவடிக்கு முன்பு ரெண்டு வேப்பமரம் இருக்கும். அப்படிஓரு அழகு. இப்பவும் மரம் அப்படியே இருக்குது. ஆனால் அந்த அழகு போச்சு. ஏன்னா அந்த சாவடி இடிந்து குட்டிச்சுவர் ஆகி விட்டது. 

சரி இப்ப எதற்குங்க அந்த கதை. நம்ம கதைக்கு வருவோம். அந்த ரெண்டு வேப்ப மரத்துக்கு நடுவிலே மாத்து விரித்து மேசை போட்டு நான்கு நாற்காலி. அவ்வளவுதான் மத்திய அமைச்சருக்கு மேடை ரெடி. முன் வரிசையில் நாங்க உட்கார வைக்கப்பட்டோம். என்ன என்னமோ பேசினார்கள். ஒண்ணுமே நினைவுக்கு வரவில்லை. ஆனால் அதை நினைத்தால் தமிழ்ச்செல்வியோட அப்பா நாச்சிமுத்து அண்ணன் மட்டும் டக்குன்னு நினைவுக்கு வந்து விடுகிறார். ஏன்னா அந்த கூட்டத்தில் அவர் செய்த காரியம் அப்படிபட்டது. 

அவரும் கூட்டத்தில் பேசினார்..பேசிக்கொண்டு இருக்கும் போதே தன் சட்டையை கழட்டி தன் இடுப்பில் வைத்திருந்த மடக்கு பேனா கத்தியை எடுத்து அவர் மார்பில் நான்கு முறை கீரிக்கொண்டு பேனாவை எடுத்தாரு. இங்க்...க்கு பதிலா தன் மார்பில் வடியும் இரத்தத்தை பிடித்து அமைச்சர் முன்பு இரத்த கையெழுத்து போட்டாரு. அண்ணன் கழக கண்மணி.. தன் முதல் மகனுக்கு செங்குட்டுவன் என்றும், இளைய மகனுக்கு அன்பழகன், மகளுக்கு தமிழ்ச்செல்வி‘ன்னு பெயர் வைத்து, ஊரோட சேர்ந்து வாழாம தனியாக பகுத்தறிவு நடை போட்டாரு.

அவரு மகள்தான் தமிழ்ச்செல்விங்கிற பெயரில் நான் சந்தித்த முதல் பெண்.. சில மாதத்திற்கு முன்பு நம்ம ஊரில் ஒரு பெரிய காரியம் ஆகி போச்சு. பெரிய காரியம் அப்படின்னா கிராமபுறங்களில் வயதானவர்கள் இயற்கை எய்தி விட்டால் அந்த நிகழ்வை பெரிய காரியம் என மரியாதையா சொல்லுவார்கள். அப்படிவொரு பெரிய காரிய நிகழ்வில் தமிழ்ச் செல்வியை பார்த்தேன்.. நான் பத்து வயதில் பார்த்த அந்த பெண், ஆத்தாவாகி இருக்கிறாள். அப்பாடா ஒரு தமிழ்ச்செல்வியோட நினைவை அசை போட்டு எடுத்தாச்சு.. அடுத்த தமிழ்ச் செல்வி... கொஞ்சகொஞ்சமா அசை போடுறேனுங்க..


Wednesday, September 14, 2011

எங்க ஊரு இப்பவே களைகட்டுது..ங்கோ...

.

அன்புள்ள இணையச் சொந்தங்களே.. வணக்கம். 

‘ஐந்து மாதமா அண்ணன் காணாமப் போய்ட்டு இப்ப வந்து சொந்தம் கொண்டாடுகிறாரே என்ன சங்கதி?’ எனக் கேட்டு விடாதீர்கள். ஏமாந்த கதையின்னு நான் எழுத.. அதைப் படித்து தான் தமிழ்நாடே திருந்திவிட்டதாக கிடைத்த மகிழ்ச்சியிலே எழுதமுடியல.. ஒரே  மொத்தாவுல்ல தமிழ்நாடே சேர்ந்து மொத்து மொத்துன்னு மொத்திட்டாங்கல்ல.. போததற்கு அம்மா வேறு மொத்தறாங்கல்ல.. அனுதாபமா.. அவுங்க மேலையா.. இப்போதைக்கு காணவில்லை.

அதுசரி... நாட்டு நடப்பை பார்ப்போம். கடந்த ஒரு மாதமா எங்க ஊரு களைகட்ட தொடங்கி விட்டது. குடவோலை முறையில் ஓட்டு போட்டு ஊரை ஆள ஆட்களை அடையாளம் காட்டத் தயாராகி விட்டார்கள். மகனும் நிற்கிறார்.. மருமகனும் நிற்கிறார்.. யாருகூட போனாலும் பொல்லாப்பு.. கண்ணாமுழி பிதுங்குது.

தினமும் நாட்டுக்காக வீட்டுப்பணத்தை எடுத்து செலவு செய்கிறார்கள்.. என்ன சொல்லுகிறீர்கள்.. அறுவடைக்கு விதைக்கிறார்கள் என்கிறீர்களா..? அதுவும் சரிதான். மாமன் கொடுக்கிறான்.. மச்சான் வாங்குறான் ஊழலை எப்படி ஒழிக்க முடியுமிண்ணே..?? அப்படின்னு ஒரு மகராஐன் சொன்னாரே ..காமராஐர்.. அவரை தெரியுமுங்களா.? ஏய் பெரிசு எங்களுக்குத் தெரியும் உனக்கு தெரியுமா.. அப்படிங்கிறீர்களா..? அவரை நாங்கள் புரிந்திருந்தா உங்களுக்கு ஏன் இவ்வளவு சிரமம்.

1972..ல்  அவருக்கு எதிரா முதன் முதலில் இவர்கள் வாய் ஜாலத்தில் மயங்கி உதயசூரியனுக்கு ஓட்டு போட்டு உங்களுக்கு இவ்வளவு சிரமத்தை உண்டு பண்ணியதே நாங்கதான் அப்படிங்கிறதை இப்ப உணருகிறோம். 

சரிங்க, நாட்டு நடப்புக்கு வருவோம். எங்க ஊரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக ஊரு களை கட்ட தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. எப்படி  வெற்றிபெறுவது.. யாரை எப்படி வளைப்பது.. ஒட்டுக்கு எவ்வளவு பணம் கொடுப்பது.. பத்து நாளைக்கு ஊருக்கே சாப்பாடு போட்டு மயங்க வைக்கலாமா..? எப்படியாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும் என புதிது புதிதாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். நேற்று ஒருவர் சொல்கிறார் ‘சரக்கு வாங்கி கொடுத்து கட்டுபடியாகாதுங்க’ன்னு..

ஏதோ புதிதாக ஒரு இயந்திரம் வந்திருக்காம்.. மொத்த பணத்தை கொண்டு போய் கட்டிவிட்டால் நம்ம ஊருக்கே கொண்டு வந்து பொருத்தி விடுவார்களாம்.. தேர்தலில் பாடுபடும் தொண்டர்கள் தாகம் எடுக்கும் போதெல்லாம் ஒரு பட்டனை ஒரு அழுத்து அழுத்தினா போதுமாம்.. அதுவா கலந்து கொட்டுமாம். என்ன செலவு ஆனாலும் எங்க ஊருக்கு அந்த இயந்திரம் வருமாம். ஒரு தம்பியிடம் நான் கேட்டேன், தம்பி அப்படி ஒரு இயந்திரம் வந்துவிட்டதா? அப்படின்னு அந்ததம்பி சொல்லுது.. புதுசா கண்டு பிடுச்சிட்டா போகுதுங்க அப்படிங்கிறார். ஐனநாயம் படும்பாடு பளிச்சுன்னு தெரியுது.. இவங்கதான் ஊராட்சியில் வெற்றி பெற்று நாளை தமிழ்நாட்டுக்கு அமைச்சர்களா வந்து புகுந்து விளையாட போகிறவர்கள். கட்சி கொடியே பறக்காத எங்க ஊரே இப்படின்னா... மற்றைய ஊருககெல்லாம் எப்படியோ..!!!

கடைசி ரவுண்டுகட்டி அடிக்க பிளான் போடுகிறார்கள். தினமும் கிடா வெட்டுவது என முடிவு பண்ணிருக்காங்க.. கரன்சியை காத்துல பறக்கவிட்டாலும் விடுவாங்க.. எங்கஊரு இப்பவே களை கட்டுது..ங்கோ....


.

Monday, March 7, 2011

ஏமாந்த கதை தொடருது....ங்கோ...

1971.. அப்படின்னு ஆரம்பித்தாலே..அய்யா.. நான் அப்பத்தான் பிறந்தேன் அப்படின்னு நிறைய பேரு சொல்லுவது  கேட்குது. நம்ம தொடரையும் படிக்க அமெரிக்காவில் இருந்து பழமைபேசி, தமிழ் டி்.வி பார்க்க முடியாததால் ஆவலோடு சித்ரா.. வழக்கம் போல ஊக்குவிக்கும் கதிரு.. வருடம் முழுவதும் காலத்தை கடத்தலாம் என்ற திட்டத்தோடு பதிவு போட வந்தா  இப்பவே காலி பண்ணச் சொல்லும் வானம்பாடியார்.. அண்ணாக்கள்.. எல்.கே, சென்னைபித்தன், நம்ம கோவை அக்ரி ஆபீசர் ஆகியோருக்கு நன்றி சொல்லி ஏமாந்த கதையை தொடர்கிறேன்.

பெற்ற தாய்க்கு சாப்பாடு போடாம பாசம் பொத்துக்கிட்டு வந்த மாதிரி..தாய் மொழி தமிழை தெரிஞ்சுக்க விரும்பாம வெறும் பாசம் வைக்க மட்டும் அடுக்கு மொழிச்சுவை பயன்பட்டது. சுவையா பேச தெரிந்தவர் அப்பவே தாய்மொழி கல்விக்கு விதை போட்டடிருந்தா.. இன்னைக்கு நாய் பேயெல்லாம் கோர்ட்டுக்கு போகுமா.. எனக்கும் நீதிமன்றம் அப்படின்னு எழுதாம கோர்ட்டுன்னு எழுத வருமா.. எதைபற்றியும் சிந்திக்காம பண்ணிபோட்டாரு.. கைது பண்ணியதாலேயே ஒருவர் குற்றவாளியல்ல அப்படின்னு அவரு சொன்னா.. ஊரே அதைத்தானே சொல்லுது.. நல்லா வியாக்கானம் பேசி கை கண்டுக்கிட்டாரு. இவ்வளவு தொலைத் தொடர்பு வந்த பின்பும் உங்களையே 
ஏமாற்றுகிறார் என்றால் எங்களை.. இல்லை என்னை எவ்வளவு ஏமாற்றி இருப்பார். கதைக்கு வருவோம்..

 
1969ல் அண்ணா இறந்தார்..அப்ப நம்ம தலைவரு பாடினாரு பாரு ஒரு ஒப்பாரி.. இதயத்தை இரவலா கேட்டாரு.. அதை கேட்ட நான்.. அண்ணா கொடுத்திட்டுத்தான் போயிட்டாருன்னு நம்பினேன். ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தாரு.. வந்த ரயில் தானே நின்னுது அவ்வளவு சக்தி அப்படின்னெல்லாம் மேடைப் பேச்சை கேட்டு கேட்டு முதலில் அதை நாங்க நம்பி ஊரையே நம்ப வைத்து, அப்ப டி.வியே நாங்க தானே.. இவரு எங்கே பேசினாலும் ஓடோடிச் சென்று அதை கேட்டு ரசித்து அதை அப்படியே அவரு குரலில் எங்க ஊரில் பேசிக்காட்டியிருக்கிறேன். என் பேச்சையே ரசித்த எங்க ஊரு சொந்த பந்தங்கள் மனதில் உதய சூரியனை வார்த்தை பசைபோட்டுல்ல ஒட்டினேன். இன்னொரு விசயம், கதா நாயகனைப் பற்றி சொல்லாம கதையை ஆரம்பிக்கக்கூடாதில்ல. அதுதான் நம்ம எம்.ஜி.ஆர். காதுக்கு அவரு.. கணண்ணுக்கு இவரு.. காட்சிக்குன்னு வைச்சுக்கங்க. அவரு பேச்சு இவரு நடிப்பு. அது இருக்கட்டும். காலம் ஒடுது..1971 ஆம் வருடம்.. காங்கிரஸ் உடையுது. அய்யாக்களே நான் வரலாற்று ஆசிரியர் இல்லை, வருடங்கள் முன்ன பின்ன வரும். குற்றம் கண்டு பிடிச்சா மனசுகு்ள்ள வைத்து கொள்ளுங்கள்.


இந்திரா காந்தி அவர்களுக்கு வந்த நெருக்கடி காரணமாக தேர்தல் வந்தது. 1967ல் தி.மு.க கூட்டணியிலிருந்த சுதந்திராக் கட்சி காமராசருடன் கூட்டணி சேர்ந்து தி.மு.க‘வை ஒரு கை பார்க்காமல் விடமாட்டோம் என வரிந்து கட்டிக் கொண்டு நிற்குது. காமராசரை ஒரு தேசத்துரோகியாக தன் பேச்சால் எங்களைப் போன்ற இளைஞர்கள் மனதில் பதிய வைத்து விட்டார் கலைஞர். நாங்களும் எதைப்பற்றியும் சிந்திக்க முடியாமல் மந்திரித்து விட்ட கோழி மாதிரிக்கு அவரு பேச்சுக்கு அடிமையாக் கிடந்தோம். தேர்தல் வந்தது, ஊரே பேசுது... தி.மு.க அவுட்டுன்னு.. இவரு உடன்பிறப்பே அப்படின்னு பாசவலையைப் போட்டு எங்களை உசுப்பி விட்டுடாரு.... அப்பவெல்லாம் காலையிலே முரசொலி பார்த்துபோட்டுத்தானே பல் துலக்குவோம்.. முரசொலி வரவில்லை என்றால் பல்லே துலக்க மாட்டீங்களா.. அப்படின்னு யாரோ கேட்க நினைக்கறீங்க.. அந்த கூத்தை வேற சொல்லனுமா.. கதைக்கு வருவோம்.

காமராசர் தலைமையில் போட்டி போடும் கூட்டணி வெற்றி பெறும் என்ற கணிப்பு. அந்த தேர்தலில் பம்பரமா பணியாற்றி முதன்முதலில் ஓட்டு போட்டேன். அந்த தேர்தலில் ஆற்றிய பணியைப் பற்றி.. அவரு நடையிலே சொன்னா... நினைக்கிறேன் மணக்கிறது..என் நெஞ்சமெல்லாம் இனிக்கிறது.... அதைப்பற்றியும் களப்பணிகள் பற்றியும்  அடுத்த பதிவில் விரைவில்... வணக்கமுங்கோ...


...